Showing posts with label நாவலனுபவம். Show all posts
Showing posts with label நாவலனுபவம். Show all posts

October 23, 2024

புல்புல்தாரா - நாவலுனுபவம்

 சமீபத்தில் வாசித்து முடித்த பா. ராகவனின் 'புல்புல்தாரா' ஒரு சுவாரசியமான நாவல். தெளிவான கதாபாத்திரங்களும், விறுவிறுப்பான நிகழ்வுகளையும் கொண்டு புனையப்பட்ட ஒரு நெடுங்கதை.   

அலகிலா விளையாட்டு, யதி, இறவான் ஆகிய நாவல்களுக்கு பிறகு நான் வாசிக்கும் நான்காவது பாரா நாவல் இது. அவரது சமூகவலைதளத்தை முன்னர் தொடர்ந்து கவணித்து வந்துள்ளேன். அதில் அவரது கருத்துக்களும் பார்வையும் ஆர்வமூட்டக்கூடியாவையாக இருக்கும். அப்போதிலிருந்தே அவரது படைப்புகளை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. 

June 21, 2022

மைத்ரி : துளியின் பூரணம்

 மைத்ரி : துளியின் பூரணம்


சரியாக ஓராண்டுக்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியான எமர்சனின் 'இயற்கையை அறிதல்' புத்தகத்தை வாசித்தேன். அதன் கவித்துவ உரைநடையும், ஒரே நேரத்தில் அந்தரங்கமாகவும் உலகுதழுவியும் பேசும் அதன் த்வனியும் என்னை வெகுவாக ஈர்த்தது. நூலின் பல இடங்களில் அடிக்கோடிட்டு மீண்டும் மீண்டும் வாசித்தேன். அதுபோதாமல், அடிக்கோடிட்ட வரிகளை தட்டச்சிட்டு என் வலைப்பக்கத்தில் பதிவேற்றினேன். பின்னர் வலைப்பூவில் எழுதுவதை நிறுத்தியதால் சில நாட்களில் அந்தப் பதிவும் என் நினைவிலிருந்து அகன்றுபோனது.

June 11, 2021

ஜீவிதத்தின் கண்ணீரும் குருதியும்: அசோகமித்திரனின் தண்ணீர் நாவல்

வெகு நாட்களாக என் புத்தக அலமாரியில் வாசிக்கப் படாமலிருந்தது அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவல். சிறுநாவல் தானே இன்று வாசிக்கலாம் நாளை வாசிக்கலாம் என்று அப்படியே தள்ளிப்போய்விட்டது.

இப்போது இதை வாசித்து முடித்தவுடன் ஒரு மேதையின் மாஸ்டர்ப்பீஸை இத்தனை நாள் தவறவிட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வைத்துவிட்டது.


தண்ணீர் பஞ்சத்தில் அல்லற்படும் சென்னை நகரமே இந்நாவலின் கதைக்களம். தண்ணீருக்காக மக்கள் விடிவதற்கு முன்பிருந்தே தெருத்தெருவாக அலைகிறார்கள். 

'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கிணங்க மனதின் சமநிலை, குடும்ப அமைப்பு, சமூகச் சூழல், அரசாங்க செயல்பாடு என ஒவ்வொன்றும் எப்படி அமையாமல் அல்லற்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் காட்சிப்படுத்தும் நாவல்.

June 10, 2021

யதி : சன்யாசம் சிலாகிப்பு சறுக்கல்

பா. ராகவன் எழுதிய யதி நாவல் வீட்டை துறந்து சன்யாசம் மேற்கொண்ட நான்கு சகோதரர்களின் கதை. 

ஒரே வீட்டின் நான்கு சகோதரர்கள் வெவ்வேறு காலங்களில் வீட்டை துறந்து சன்யாசம் மேற்கொள்கிறார்கள். இந்நால்வரும், தங்கள் தாயார் மரணத்தை நெருங்குவதை அறிந்து மீண்டும் சந்திக்கின்றன.

June 7, 2021

நிலம் பூத்து மலர்ந்த நாள் - நாவலுனுபவம்

 நிலம் பூத்து மலர்ந்த நாள்

இன்றைய தமிழ் நிலத்தின் சிறப்புப் பண்புகளாக வீரம், காதல், விருந்தோம்பல் போன்ற விழுமியங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விழுமியங்கள் எப்படி, யாரால் முடிவுசெய்யப்படுகின்றன? இவை எங்கு வேர்கொண்டுள்ளன? போன்ற கேள்விகளை கேட்டுப்பார்த்தோமானால், "செம்புல பெயல் நீர் போல்...", "யாதும் ஊரே யாவரும் கேளீர்!" போன்ற வரிகள் அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பட்டு, அன்று முதல் இன்று வரை தொன்றுதொட்டு வரும் விழுமியங்களாக இவை விளக்கமளிக்கப்படும்.

June 6, 2021

குமரித்துறைவி : சிறு குறிப்பு

 குமரித்துறைவி - ஜெயமோகன்



அபராமான வாசிப்பனுபவத்தை அளித்தது இக்கதை. தேன்குடத்தில் தூக்கி வீசப்பட்டவன் போல எத்தனை நெகிழ்வுகள் எத்தனை விம்மல்கள எத்தனை தித்திப்புகள்.

May 31, 2021

அடிக்கோடுகளின் வழியே அலகிலா விளையாட்டு

 அலகிலா விளையாட்டு

பா. ராகவன்

> உடலின் உறுதிக்கும் மனத்தின் உறுதிக்கும் ஒருங்கே சவால் விடுகிற சமுராய் வீரன் - குளிர்.

> குளிர். காரம். மிளகாய்ச் சட்னி. ரொட்டி. பருப்புக்கூட்டு. பகவான்.

> நதிப்பாதையெங்கும் கூழாங்கற்களைக் கொட்டிவைத்தது யார்? கடவுள் தான் என்றால் அவரது அழகுணர்ச்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

May 28, 2021

வெக்கையும் சாரலும் : பூமணியின் வெக்கை நாவல்

வெக்கையும் சாரலும்:

பூமணியின் வெக்கை நாவல்


பதினைந்து வயது சிறுவன் செய்யும் ஒரு வஞ்சின கொலைக்கு பிறகான ஏழு நாட்களாக விரியும் கதை. 

இதற்குள்ளாக அந்நிலத்தின் விவரிப்புகள், உறவுகளின் பாசப் பிணைப்புக்கள், பலதரப்பட்ட மனிதர்கள் என ஒரு அழகிய உலகை படைத்து காட்டிருக்கிறார் பூமணி.

October 17, 2020

வெள்ளையானை - ஜெயமோகன் - கடிதம்

 அன்புள்ள ஜெயமோகன்,


வெள்ளையானை வாசித்தேன். இன்று மானுடத்தின் அடிப்படைகளாக விளங்கும் ஜனநாயகம், சுதந்திரம் போன்ற விழுமியங்களைப் பெறச் சிந்தப்பட்ட குருதியையும் விழிநீரையும் பதிவு செய்த படைப்பு. எத்தனை சிலுவையேற்றங்களையும் எத்தனை உயிர்த்தெழல்களையும் மனிதன் கடந்து வந்திருக்கிறான்...

May 21, 2020

வெண்முரசு - களிற்றியானை நிரை : சிறு குறிப்பு

களிற்றியானை நிரை : தொல்நகரின் எழுச்சி.

வெண்முரசு நாவல் வரிசையில் 24 ஆவது நாவலான களிற்றியானை நிரை அஸ்தினபுரியின் எழுச்சியை காட்டுகிறது. 
ஆதன் என்ற தென்குமரி நிலத்தவன் 'அஸ்தினபுரி' என்ற சொல்லின் ஆணையால் தன்னகர் நீங்கி செல்கிறான். அவன் மட்டும் அல்ல அனைத்து திசைகளிலும் அஸ்தினபுரி மக்களை அழைக்கிறது. அஸ்தினபுரியின் தொல்குடிகள் நகர் நீங்குகிறது. ஆள் அரவமே இல்லாத நிலையில் அனைத்து நீர்க்கடன்களையும் முடித்து யுதிஷ்டிரன் நகர் புகுகிறார். 
சம்வகை, சுரேசர், யுயுத்சு சேர்ந்து நகரை மீட்கிறார்கள். 

உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்: சிறு குறிப்பு.

உறுபசி - கல்பொருசிறுநுரை 


சம்பதின் மறைவிற்கு பிறகு அவனது நண்பர்கள் வழியே சிதறிய நினைவுகளாக அவனது வாழ்வு சொல்லப்படுகிறது. 

அழகர், ராமதுரை, மாரியப்பன், யாழினி, ஜெயந்தி இவர்கள் ஐவரும் கண்ட சம்பத் தன்னை ஒரே நேரத்தில் ஈர்க்கவும், விலக்கவும், வெறுக்கவும் செய்பவனாக உள்ளான். செடிகளை விற்க மறுப்பவன், தீப்பெட்டி தீக்குச்சிகளை விரும்புபவன், சதா சிந்தனை செய்பவன் போன்ற வித்யாசமான குணங்களை கொண்டவன். 
தன்னை ஒரு கள்ளிச்செடி என்றும் அணைப்பவர்களை காயப்படுத்துவேன் என்றும் நினைக்கிறான். 
பலகோடி நட்சத்திரங்கள் இருக்கும் வானில் ஒரு எரிக்கல் போல் பிரகாசமாக ஒளிர்ந்து அணைகிறான். தீக்குச்சி போல் எரிந்து முடிகிறான். கல்பொருசிறுநுரை போல் பொங்கி அமிழ்கிறான்.

இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் : நாவலனுபவம்

தானே உலரும் கண்ணீர்
எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல்
 
சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும், அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றி தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது.  

இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல். அத்தோடு மட்டும் இந்நாவலைக் குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டுச் சென்றுள்ளது.

விஷ்ணுபுரம் - நாவலனுபவம் - கடிதம்

Vishnupuram (Tamil) eBook: ஜெயமோகன், Jeyamohan: Amazon.in ...

அன்புள்ள ஜெயமோகன்,

விஷ்ணுபுரம் வாசித்த பின்னர்  ஒரு மாபெரும் கனவு போல் சொற்கள் மட்டுமே என்னுள் நிறைந்துள்ளது.

விஷ்ணுபுரம் சார்ந்த அனைத்தினையும் சங்கர்ஷனின் “பத்மபுராணம்” சார்ந்த உரையாடல்கள் வாயிலாக நீங்களே வினவி, ஆராய்ந்து, விவரித்து, மறுத்து, ஆதரித்து, விளக்கியும் உள்ளீர்கள். அது வாசகர்களை பெரும் உவப்பிற்குள்ளாக்குகிறது.

இப்படி ஒரு மாபெரும் கனவை, ஒரு காவிய நகரை எழுத்தை தூரிகையாக்கி வாசகர்களின் மனதுள் தீட்டி, அதனை முப்பரிமாண உலகம் என்று நம்பவைத்து, பின்னர் அதே எழுத்தை கடப்பாரையாக்கி ஒவ்வொரு சிற்பமாய், ஒவ்வொரு தூணாய், ஒவ்வொரு கோபுரமாய்  உடைத்து எறிந்து இறுதியில் நீங்களே அக்கரிய சிலையாகி புன்னைகைக்கும் போது வாசகர்கள் மனதுள் ஏற்படும் வெறுமையும், அவர்களின் பெருமூச்சுமே இந்நாவலை காவியமாக நிலைநிறுத்துகிறது.

முதல் பகுதி வழுக்கிக்கொண்டு நான்கே நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். அதன் பின்னர் ‘கௌஸ்தூபம்’ கடினமாக இருந்தது. தத்துவ விவாதங்களை மறுவாசிப்பு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரு இந்துத்துவர் என்பவர்களுக்கு அந்த ‘ஊட்டுபுரை’ பகுதியை வாசித்து காண்பித்தாலே போதும். அவர்கள் அளறிவிடுவார்கள்! விஷ்ணுபுரத்தில் வரும் எந்த பிரிவினரையும் உங்கள் பகடி விட்டுவைக்கவில்லை.

ஸ்ரீபாதம் பகுதியில் வரும் கதாபாத்திரங்களை கூர்ந்து வாசித்து வந்ததால் ‘மணிமுடி’ மிகவும் அருமையாக சென்றது. அதேசமயம், பல கதாபாத்திரங்களின் ‘character arc’ வியப்பளித்தது. ஆனாலும் ‘மணிமுடி’ பகுதியை என்னால் வேகமாக வாசிக்க இயலவில்லை அது பல தடைகள் போட்டு சிகரத்திலிருந்து சமவெளியை நோக்கி தள்ளியது.

‘Silicon Shelf’ பக்கத்தில் வந்த நீண்ட கட்டுரையை இந்த நாவல் படிக்கும் முன்னே படித்து “யப்பா! எவ்ளவோ இருக்கும் போல. எப்புடிலாம் படிக்கிறாங்க!” என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால், இப்போது இன்னும் அதுபோல் நூறு பக்கங்கள் எழுதினாலும் “விஷ்ணுபுற விளைவை” விளக்குவது எளிதல்ல என்று புரிகிறது.

இதன் கதாபாத்திர வடிவமைப்புகளை பற்றி மட்டும் தனியாக ஒரு கடிதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

இனி வரலாறு சம்மந்தப்பட்ட எதனை வாசித்தாலும் விஷ்ணுபுரமும் அதனுள் சஞ்சரித்தவர்களின் நினைவுகளே வரும்!

இது புரை நீக்கிய தெளிந்த கண்களா அல்ல, கண்ணாடி மாட்டிய புதிய கண்களா? என்று தெரியவில்லை. 

நன்றி.

இப்படிக்கு,

கிஷோர் குமார்.

18-05-2019

December 22, 2019

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

தமிழின் மிக முக்கிய நாவல்களுள் ஒன்றான ஜேஜே: சில குறிப்புகளை நான்கு மாதங்களுக்கு முன் மிக ஆர்வத்துடன் வாங்கி , எப்போதும் கதைகள் வசிப்பது போல் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். படித்து முடித்து மூடி வைக்கும்போது
"சரி okay. இப்ப இந்த நாவல் என்ன சொல்ல வருது? சரளமான கவித்துவமான மொழி இருக்கு ஆனா கதை என்ன ?"
 என்ற கேள்வியுடனும் குழப்பத்துடனும் புத்தகத்தை மூடி ராக்கில் வைத்துவிட்டேன்.
Image result for jj sila kuripugal

இந்நூலின் பின்னுரையில் சுகுமாரன் கூறுவதைப் போல் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, வரவேற்கப்பட்ட தமிழின் நவீன நாவல் இதுவே. எக்கச்சக்கமான விமர்சனங்கள், வாசிப்பனுபவங்கள் இணையத்தில் குவிந்துள்ளது. தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக ஜெயமோகன் இதனை பட்டியலிட்டுள்ளார். மேலும் அவரது "சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்" என்னும் நூலில் ஒரு பத்து பக்கத்திற்கு ஒரு முறையாவது இந்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தையும் , இதன் மதிப்பையும் பற்றி கூறியுள்ளார். நமக்கு மட்டும் ஏன் இது சாதாரணமாக தெரிகின்றது என்று சலிப்புடன் இதை ஒதுக்கி வைத்துவிட்டேன்.
Image result for sundara ramaswamy ninaivin nathiyil
Image result for sundara ramaswamy
Sundara Ramasamy

பின்னர் ஒருநாள் யுவன் சந்திரசேகர் எழுதிய 'கானல் நதி'யில் வரும் கதாநாயகனின் (தனஞ்சய முகர்ஜி) டயரி குறிப்புகளை படித்துக்கொண்டிருந்த போது ஜேஜே யின் நியாபகம் வந்தது. சரியென்று கானல் நதி முடித்த கையோடு ஜேஜே : சில குறிப்புகளை (மீண்டும்) வாசிக்க தொடங்கினேன்.
Image result for kaanal nadhi yuvan

முன்பு போலவே இப்போதும் என்னை வசீகரித்தது இதன் மொழியே. "மேகங்களை கலைப்பவன் ஜேஜே"
 என்ற வரியில் நான் நின்று விட்டேன். இந்நாவலை இதன் மொழிக்காகவே வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிதானமாக வாசித்தேன். மிக மிக நேர்த்தியுடனும் 'சவரக்கத்தியின் கூர்மையுடனும்' சுந்தர ராமசாமியால் இந்நாவல் செதுக்கப்பட்டுள்ளது. இதனை வாசிப்பவர்களுக்கு ஜேஜே நிச்சயமாக ஆதர்ச நாயகனாகி விடுவான். மேலும் இந்நாவல் முழுக்க நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அங்கதமும் பகடியும் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளது.

ஜேஜே வை மைய அச்சாக வைத்து அவனை சுற்றியுள்ள சமூகத்தை ஜேஜே மூலமாகவே விமர்சிக்கிறார் இதன் ஆசிரியர். முற்போக்கு எழுத்து, பெண் எழுத்து, நவீன எழுத்து, வணிக எழுத்து போன்ற எழுதுமுறைகள், நிறுவன அமைப்பு, அரசியல் அமைப்பு, இலக்கிய அமைப்பு, சமூக அமைப்பு போன்ற அமைப்புகள், பெற்றோர், மனைவி, நண்பன், ஆசிரியர் போன்ற உறவுகள் என அனைத்தையும் ஜேஜே வின் கண்கள் மூலம் எள்ளலுடனும் விமர்சனதுடனும் காட்சிகளாக விரித்தெடுக்கிறார் சுந்தர ராமசாமி.

இந்நாவலின் முதற்பகுதி முழுக்க பாலு என்ற தமிழ் எழுத்தாளர் பேசிக்கொண்டே இருக்கிறான்.
"யார் ஜேஜே? அவன எப்படி தெரியும்? அவன் என்னாலா செஞ்சிருக்கான்? " என்ற கேள்விகளுக்கு ஒரு நாள் முழுக்க சகபயணி போல் ஜேஜேவை பற்றி பேசிக்கொண்டும், அவன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொண்டும் வருபவனாகவே என்னால் பாலுவை பார்க்க முடிகிறது.
ஜேஜேவின் டைரி குறிப்புகளாக விரியும் இதன் இரண்டாம் பகுதி மேலும் செறிவுடனும் கவித்துவதுடனும் பின்னப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வருடத்தில் நாற்பது ஆண்டுகளை (1981) கடக்க போகும் இந்நாவல் இன்றும் தமிழ் வாசகர்களால் பெரிதும் கொண்டாட படுகிறது. சராசரி மொழி, சராசரி கூறுமுறை, சராசரி கதாநாயகன், சராசரி பார்வை என அன்றாடம் புழங்கிவரும் அனைத்தையும் மீறி இந்நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. நவீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் இந்நாவல் என் வாசிப்பு வரிசையில் மிக முக்கிய நாவல்.

""எந்த முத்திரை வேண்டுமானாலும் என் மீது குத்தப் படட்டும். நம்பிக்கைவாதி என்றோ, அவநம்பிக்கைவாதி என்றோ, முற்போக்குவாதி என்றோ, பிற்போக்குவாதி என்றோ, சமூக அழிவிற்கு காரணமானவன் என்றோ எனக்கு பெயர் சூட்டட்டும். அனைத்தும் ஒன்றாகப்படும் இடத்திற்கு நான் போய்ச் சேரவேண்டும். ஒரு வித்தியாசம் முக்கியமானது. அது மட்டுமே எனக்கு முக்கியமானது. நான் உண்மை பேசுகிறேனா அல்லது பொய் பேசுகிறேனா என்பது.""

                                                                                            ஜோசப் ஜேம்ஸ் (ஜேஜே)


July 5, 2019

பின்தொடரும் நிழலின் குரல் - நாவலனுபவம்

பள்ளிப்பருவத்தில் 'புரட்சி' என்ற சொல் அறிமுகமானவுடன் ஏற்பட்ட கிளர்ச்சியால் தான் நான் சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, லெனின், மாவோ போன்றவர்களை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அவர்களே என் ஆதர்ச நாயகர்கள் ஆனார்கள். குறிப்பாக லெனின், அவரைப்பற்றிய ஒரு சிறு நூலை 'Prodigy' நிறுவனம் வெளியிட்டது. ஒரு மாணவனாக என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த புத்தகம். அவரை போலவே ஒரு 'படித்த' புரட்சியாளர் ஆகவேண்டுமென்று விரும்பினேன்.

தொடர்ச்சியாக இடதுசாரி நூல்களை வாசித்து வந்ததால் 'ரஷ்யா' என்னும் 'புரட்சிப்பொண்ணுலகம்' பூமியில் உள்ளது என்று அறிந்தேன். என் மனமும் அவ்வாறே பதிய வைத்துக்கொண்டது.

பன்னிரண்டாம் வகுப்பில் வாசிப்பு முற்றிலுமாக தடைப்பட்டது. ஆயினும் ரஷ்யா பற்றிய பிம்பம் என்னுள் மாறவில்லை.

பின்னர் கல்லூரி சேர்ந்தவுடன் மீண்டும் வாசிப்பை தொடங்கினேன். அப்போது தான் ஜெயமோகனின் அறிமுகம் கிடைத்தது. அவரது எழுத்துக்கள் ஒரு நீர்சுழல் போல் என்னை உள்ளிழுத்து கொண்டது. அவரது பெரும் நாவலான விஷ்ணுபுரத்தை வாசித்த அனுபவம் இன்னும் என்னுள் ஒரு கனவு போல் நிறைந்துள்ளது.

அதனை தொடர்ந்து நான் வாசித்த புத்தகமே 'பின் தொடரும் நிழலின் குரல்'. இது ஒரு அரசியல் நாவல். ஆனால், மன கிளர்ச்சியையோ துவேஷத்தையோ மட்டும் வாசகனுக்கு அளிக்காமல் ஒரு முழு குருக்குவெட்டு தோற்றத்தை நமக்கு தருகிறது.

அருணாசலம் என்பவன் ஒர் இடதுசாரி தோழர், தொழிற்சங்க உபதலைவர், அறிவுஜீவி. (இடதுகாலை எடுத்து வைக்க தயங்கும் ஒருவன்!).

அவனது ஆசான் K.K.மாதவநாயர்(K.K.M) - ஒரு போராளி, தொழிற்சங்க தலைவர், தீவிர ஸ்டாலினிஸ்ட், தியாகத்தால் கட்சியை வளர்த்து ஆளாக்கியவர்.(சைக்கிள் ஓட்ட தெரியாதவர், நாடகங்கள் விரும்பி பார்ப்பவர்!).

தொடக்கத்தில் ஒரு லட்சிய இயக்கமாக இருந்த கட்சி தொண்ணூறுகளில் தொழிலாளர்களுக்கு வக்கீல் சேவை செய்ய்யும் நிறுவனமாக மாறுகிறது. இதை சகிக்கக முடியாமல் K.K.M  தனிமையில் ஆழ்கிறார். அவரை சுற்றி பல மாற்றங்கள் ஏற்படுகி்றது. இறுதியாக அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.
அருணாசலம் அவர் இடத்தை நிறப்புகிறான். அவனது இடத்தை நாராயணன் என்னும் நவீன ஜனநாயக போராளி நிறப்புகிறான்.
மேலும் இளம் அறிவுஜீவி கதிர் அவர்கள் பக்கம் நிற்கிறான்.

அப்பொழுது அருணாசலதிற்கு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதை தொகுப்பு ஒன்று கிடைக்கிறது. அவர் கட்சிக்கு துரோகம் செய்ததால் வெளியேற்றப்பட்டவர் என்று அவன் செவிவழி செய்திகளால் அறிகிறான். ஆனால் அவரை பற்றிய சிறு தகவல் கூட கட்சி ஆவணங்களில் இல்லை. இது அருணாசலத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன், எதற்கு போன்ற கேள்விகள் அவன் மூளையை மொய்த்தன.

S.M. ராமசாமி (சுந்தர ராமசாமி) ஒரு நவீன எழுத்தாளர். அவர் வீரபத்ரபிள்ளை இறுதிக்காலத்தில் எழுதிய கடிதங்களை தருவித்து அருணாசலத்திற்கு அனுப்புகிறார்.

ரஷ்யாவில் ஸ்டாலின் அரசு நிகழ்த்தும் கொடுமைகளை எதிர்த்த தலைவர் 'புகாரின்'. அவருக்கு அரசு மரண தண்டனை வழங்கியது. இதை வீரபத்ரபிள்ளை அறிகிறார்.
புகாரின், ஸ்டாலின், ரஷ்யாவின் நிலவரம் பற்றிய உண்மைகளை எழுதுவேன் என்று பிடிவாதமாக இருந்த வீரபத்ரபிள்ளை மீது அவதூறு பரப்பி, அவரை கட்சி வெளியேற்றியது. பின்னர் அவரை பற்றிய தடையம் இல்லாமல் ஆக்கியது.
புகாரினின் ஆவி பிடித்து வீரபத்ரபிள்ளை பித்தாகிறார். அனைத்து கீழ்மைகளும் அடைந்து மரணிக்கிறார்.

இதே சம்பவங்கள் அருணாசலத்திற்கு அவனையரியாமல் நிகழ்கிறது. அவன் வீரபத்ரபிள்ளையை பற்றி கட்சி மலரில் எழுத முயல்கிறான். அவனை கட்சி அரசியல் ஆட்டத்தில் சிக்கவைத்து வெளியேற்றுகிறது. மனம் பிறழ்ந்து பித்தாகிய அவனை அவன் மனைவி நாகம்மை மீட்டெடுக்கிறாள்.

இவ்வனைத்தையும் கேட்டறிந்த ராமசாமியின் மாணவர் எழுத்தாளர் ஜெயமோகன் இதனை ஒரு நாவலாக எழுதுகிறார்
அதற்கு 'பின் தொடரும் நிழலின் குரல்' என்று தான் பெயர் வைக்க வேண்டுமென்று அருணாசலம் கூறுகிறான்.

'பின் தொடரும் நிழலின் குரல்' நாவல் வெளியாகி இருபது வருடங்கள் ஆகின்றது. ஆனால், இன்று வாசிப்பவர்களுக்கு கூட அதன் மொழி இருபது ஆண்டுகள் பழமையானது என்று தோன்றாது. ஏனெனில் அது அறத்தின் குரல், வரலாறு விழுங்கிய ஆன்மாக்களின் விசும்பல். வரலாறு வெற்றி கோஷங்களினால் மட்டும் நிறைந்தவை அல்ல என்பதனை நவீனத்துவம் மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்தபடி சொல்லிக்கொண்டே தான் இருக்கிறது.

புகாரின், வீரபத்ர பிள்ளை, அருணாசலம் அனைவரும் அறத்தின் சரடினை கெட்டியாக பிடித்துள்ளனர். அல்லது அறம் (பேய்) அவர்களை பிடித்து உலுக்குகிறது.  அவர்கள் புனிதர்கள் அல்ல, ஆயினும் அந்நிலைக்கு அருகே செல்ல முயன்ற மனம் பிறழ்ந்தவர்கள்.

ஜெயமோகனின் நாவல்கள் விரையும் விமானப்பயணமோ, குதிரைஓட்டமோ, ஓட்டப்பந்தையமோ அல்ல. அவை 'டெக்டானிக் ப்லேட்' நகர்வுகள், மிக மெல்லமாக, மிக ஆழமாக  நமக்குள் நகரும் பின்னர் சுனாமியும், நிலநடுக்கங்களும் ஏற்படுத்தி நம்மை நிலைக்குலைத்து விடும்.

ஜெயமோகன் இது விஷ்ணுபுரத்திற்கு இணையான ஒரு செவ்வியல் ஆக்கம் என்று கூறுகிறார். இரண்டும் வெவ்வேறு தளத்தில் இருந்தாலும் அது உண்மையே.

மார்க்சியம், ஸ்டாலினியம், காந்தியம் போன்ற தத்துவங்களை உரையாடல்கள் மூலம் மிக விரிவாக அலசி ஆராய்கிறது. மேலும் இதில் பல நுட்பமான இடங்களும் உள்ளது என்று நினைக்கிறேன்.

உதாரணமாக அருணாசலம், வீரபத்ரபிள்ளை இருவரும் சிவனின் பெயர் கொண்டவர்கள், அறிவுஜீவிகள்,
வேறு யாரோ ஒருவருக்காக அறமென்னும் விஷத்தை அருந்தி நீலம் பாரித்தவர்கள். விஷம் உள்இறங்கி மடியாமல் சிவனை காக்கும் நாகத்தை போல் நாகம்மை அருணாசலத்தை காக்கிறாள். ஆனால் வீரபத்ரபிள்ளைக்கு அந்த பாக்கியம் அமையவில்லை.

புகாரின், வீரபத்ரபிள்ளை, அருணாசலம் என்று தொடரும் இவ்வரிசையில் அடுத்து யார் என்று யோசிக்கும் பொழுது அருணாசலம் கதிருக்கு கடிதம் எழுதுகிறான். ஆம், வலையின் அடுத்த முடிச்சு அவன்தான்.

பாதி புத்தகம் வரை எதார்த்தமாக செல்லும் நாவல் அடுத்த பாதியில் ஒரு கனவு பாய்ச்சலினை எடுக்கிறது. கடிதம், சிறுகதை, நாடகம், குறிப்புகள், என்று பலவாக விரிந்து நாவல் ஒரு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.

அருணாசலத்திற்கு மெல்ல மெல்ல மனம் பிறழ்ந்து அவன் வீரபத்ரபிள்ளையாகவே மாறும் இடம் அபாரம். K.K.Mன் உரை, கதிர்-அருணாசலம் உரையாடல், நாராயணனின் மாற்றம், அன்னா இடம்பெறும் நாடகங்கள், டால்ஸ்டாய்-தஸ்தாவெஸ்கி நாடகம், என பல சிறந்த இடங்கள் உள்ளன அவற்றை மட்டும் தனியாகவே பலமுறை வாசித்து உள்ளேன்.

இது பெண்களை அவமதிக்கும் நாவல் என்று ஒரு விமர்சன கட்டுரையில் படித்தேன். ஆனால் ஜெயமோகன் பெண்களையே அறத்தின் காவலர்களாகவும், அன்பின் விளைநிலமாகவும், ஆற்றலின் ஊற்றாகவும் இந்நாவலில் உருவகப்படுத்தியுள்ளார்.(நான் மிகைப்படுதவில்லை!)

வரலாறு என்னும் நதி அதனுள்ளே மூழிகியவர்களின் குருதியால் நிறைந்தது, அவர்களின் உத்வேகத்தால் ஓடுகிறது, அவர்களின் அறத்தால் அது தெளிந்துள்ளது.

"வெறும் சொற்கள் இல்லையா? ஆனால், அர்த்தமற்றதும் உத்வேகம் நிரம்பியதுமான சொற்கள் தரும் மெய்மையின் தரிசனத்தை ஒருங்குள்ள தருக்கம் ஒருபோதும் தருவதில்லை."
- பீயேக்காரன்