December 24, 2019

சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் - வாசிப்பனுபவம்

சுந்தர ராமசாமி தமிழ் நவீன இலக்கிய உலகில் ஒரு தவிர்க்க இயலாத ஆளுமையாக விளங்கியவர். அவரது படைப்புகள், விருதுகள், தேதிகள் ஆகியவற்றை மட்டும் பட்டியலிட்டு ஒரு அஞ்சலி கட்டுரையை எழுதாமல், ஜெயமோகன் தன் ஆசான் சு.ரா வை ரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்தும் ஒரு ஆக்கத்தை படைத்துள்ளார்.
உளவேகத்தில் நான்கே நாட்களில் ஓய்வின்றி எழுதப்பட்ட இப்புத்தகத்தின் முதற்பகுதி சுந்தர ராமசாமியின் பழக்கங்கள், செயல்கள், பண்புகள் ஆகியவற்றை பற்றி மிக விரிவாக விளக்குகிறது. ஒரு நீள் கட்டுரையை இவ்வளவு சுவாரசியமாக படைக்க இயலுமா என்று எண்ணி வியக்க வைக்கின்றது.

" அந்தரங்கமானவற்றை பற்றி பேசலாகாது, அன்பும் நெகிழ்வும் காட்டுவது பலவீனம் போன்ற எண்ணங்களை கொண்டிருந்த என் அப்பாவின் காலகட்டத்தை சேர்ந்தவர் சுந்தர ராமசாமி."

எம்.எஸ். பற்றி சுந்தர ராமசாமி "அவர் எனக்கு முன்னாடியே செத்திர கூடாதுன்னு அப்பப்ப நெனெப்பேன். " என்று கூறுவது அவர்களின் நட்பின் ஆழத்தை காட்டுகிறது.

ஜெயமோகன் தமிழ் இலக்கிய உலகிற்கு நுழைவதற்கு பெரும் தூண்டுதலாக இருந்துள்ளார் சு.ரா.

"எழுதும்போது அனைத்து துன்பங்களையும், அவமானங்களையும், இழப்புகளையும், இனிமையாக மாறிக்கொள்ளலாம். நிஜ வாழ்வின் துன்பங்கள் ஒரு சாரமற்றவை , அத்தத் தளிப்பே துக்கமாகிறது, ஏன், ஏன் என்று மனசு தவிக்கிறது. எழுத்துல அதலாம் ஏன்னு நமக்கு தெரியும்."

நூலின் இரண்டாம் பகுதி கச்சிதமாக தன்னை வகுத்துக்கொண்டு வெவ்வேறு தளங்களில் சுந்தர ராமசாமியை விளக்குகிறது. அவரது இறுதி சடங்கு நாள் மிக நெகிழ்வுடன் எழுதப்பட்டுள்ளது.
தன் ஆசானை உரசி உரசியே ஜெயமோகன் தன்னையும் சுரா வையும் கண்டடைந்துள்ளார். இருவரும் வெவ்வேறு தளத்தில், காலத்தில், கூறுமுறையில் இயங்குபவர்கள் ஆயினும் ஜெயமோகன் ராமசாமியின் தொடர்ச்சியே. இதை புரிந்துகொள்ள  Einstein- Niels Bohr , Socrates- Plato போன்ற பல உதாரணங்கள் வரலாற்றில் உள்ளன.
காந்தி, நேரு, குரு நித்யா, நாராயண குரு, எம்.எஸ் , பிரமிள், அசோகமித்திரன், ஜெயகாந்தன், நகுலன் போன்ற பல ஆளுமைகளோடு சுரா வின் உறவை விளக்குகிறார் ஜெயமோகன்.
நாம் படித்துக்கொண்டிருக்கும் போதே ஜெ-சு.ரா இடையே உரசல் விரிசலாகி விரிந்துக்கொண்டே போகிறது. படிக்கும் நமக்கு ஒரு பதைப்பதைப்பு வருகிறது.
இந்நூலில் சுராவின் உரையாடல்கள் சிறந்த மேற்கோள்களாக இருக்கும். அவை ஒரு நிகழ்வையோ, ஆளுமையையோ முழுவதுமாக விளக்கும் செறிவோடு அமைந்துள்ளது, சுராவின் அவதனிப்பையும் சிந்தனை நுட்பத்தையும் விளக்கும்.
சுரா சொல்ல தட்டச்சு வேறுஒருவர் செய்வார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அவரது மேலைத்துவ மோகம், குளியலறை பாடல், வாசிக்கும் முறை, எழுத்து முறை என அனைத்தையும் ஜெயமோகன் விளக்கியுள்ளார். இதில் ஜெயமோகனின் குரல் அதிகமாக ஒலிப்பது நெருடும் போதே கா.நா.சு - சு.ரா பகுதி வந்து அக்குழப்பத்தை தெளிவாக்கியது. சுந்தர ராமசாமியின் ஆளுமையை விளங்கிக்கொள்ள இந்நூல் ஒரு பெரிய துணையாக அமையும்.

December 22, 2019

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

தமிழின் மிக முக்கிய நாவல்களுள் ஒன்றான ஜேஜே: சில குறிப்புகளை நான்கு மாதங்களுக்கு முன் மிக ஆர்வத்துடன் வாங்கி , எப்போதும் கதைகள் வசிப்பது போல் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். படித்து முடித்து மூடி வைக்கும்போது
"சரி okay. இப்ப இந்த நாவல் என்ன சொல்ல வருது? சரளமான கவித்துவமான மொழி இருக்கு ஆனா கதை என்ன ?"
 என்ற கேள்வியுடனும் குழப்பத்துடனும் புத்தகத்தை மூடி ராக்கில் வைத்துவிட்டேன்.
Image result for jj sila kuripugal

இந்நூலின் பின்னுரையில் சுகுமாரன் கூறுவதைப் போல் தமிழில் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, வரவேற்கப்பட்ட தமிழின் நவீன நாவல் இதுவே. எக்கச்சக்கமான விமர்சனங்கள், வாசிப்பனுபவங்கள் இணையத்தில் குவிந்துள்ளது. தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்றாக ஜெயமோகன் இதனை பட்டியலிட்டுள்ளார். மேலும் அவரது "சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்" என்னும் நூலில் ஒரு பத்து பக்கத்திற்கு ஒரு முறையாவது இந்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தையும் , இதன் மதிப்பையும் பற்றி கூறியுள்ளார். நமக்கு மட்டும் ஏன் இது சாதாரணமாக தெரிகின்றது என்று சலிப்புடன் இதை ஒதுக்கி வைத்துவிட்டேன்.
Image result for sundara ramaswamy ninaivin nathiyil
Image result for sundara ramaswamy
Sundara Ramasamy

பின்னர் ஒருநாள் யுவன் சந்திரசேகர் எழுதிய 'கானல் நதி'யில் வரும் கதாநாயகனின் (தனஞ்சய முகர்ஜி) டயரி குறிப்புகளை படித்துக்கொண்டிருந்த போது ஜேஜே யின் நியாபகம் வந்தது. சரியென்று கானல் நதி முடித்த கையோடு ஜேஜே : சில குறிப்புகளை (மீண்டும்) வாசிக்க தொடங்கினேன்.
Image result for kaanal nadhi yuvan

முன்பு போலவே இப்போதும் என்னை வசீகரித்தது இதன் மொழியே. "மேகங்களை கலைப்பவன் ஜேஜே"
 என்ற வரியில் நான் நின்று விட்டேன். இந்நாவலை இதன் மொழிக்காகவே வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிதானமாக வாசித்தேன். மிக மிக நேர்த்தியுடனும் 'சவரக்கத்தியின் கூர்மையுடனும்' சுந்தர ராமசாமியால் இந்நாவல் செதுக்கப்பட்டுள்ளது. இதனை வாசிப்பவர்களுக்கு ஜேஜே நிச்சயமாக ஆதர்ச நாயகனாகி விடுவான். மேலும் இந்நாவல் முழுக்க நீங்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம். அங்கதமும் பகடியும் இந்நாவல் முழுக்க நிறைந்துள்ளது.

ஜேஜே வை மைய அச்சாக வைத்து அவனை சுற்றியுள்ள சமூகத்தை ஜேஜே மூலமாகவே விமர்சிக்கிறார் இதன் ஆசிரியர். முற்போக்கு எழுத்து, பெண் எழுத்து, நவீன எழுத்து, வணிக எழுத்து போன்ற எழுதுமுறைகள், நிறுவன அமைப்பு, அரசியல் அமைப்பு, இலக்கிய அமைப்பு, சமூக அமைப்பு போன்ற அமைப்புகள், பெற்றோர், மனைவி, நண்பன், ஆசிரியர் போன்ற உறவுகள் என அனைத்தையும் ஜேஜே வின் கண்கள் மூலம் எள்ளலுடனும் விமர்சனதுடனும் காட்சிகளாக விரித்தெடுக்கிறார் சுந்தர ராமசாமி.

இந்நாவலின் முதற்பகுதி முழுக்க பாலு என்ற தமிழ் எழுத்தாளர் பேசிக்கொண்டே இருக்கிறான்.
"யார் ஜேஜே? அவன எப்படி தெரியும்? அவன் என்னாலா செஞ்சிருக்கான்? " என்ற கேள்விகளுக்கு ஒரு நாள் முழுக்க சகபயணி போல் ஜேஜேவை பற்றி பேசிக்கொண்டும், அவன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொண்டும் வருபவனாகவே என்னால் பாலுவை பார்க்க முடிகிறது.
ஜேஜேவின் டைரி குறிப்புகளாக விரியும் இதன் இரண்டாம் பகுதி மேலும் செறிவுடனும் கவித்துவதுடனும் பின்னப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வருடத்தில் நாற்பது ஆண்டுகளை (1981) கடக்க போகும் இந்நாவல் இன்றும் தமிழ் வாசகர்களால் பெரிதும் கொண்டாட படுகிறது. சராசரி மொழி, சராசரி கூறுமுறை, சராசரி கதாநாயகன், சராசரி பார்வை என அன்றாடம் புழங்கிவரும் அனைத்தையும் மீறி இந்நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. நவீன எழுத்தாளர்கள் பலரின் எழுத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தும் இந்நாவல் என் வாசிப்பு வரிசையில் மிக முக்கிய நாவல்.

""எந்த முத்திரை வேண்டுமானாலும் என் மீது குத்தப் படட்டும். நம்பிக்கைவாதி என்றோ, அவநம்பிக்கைவாதி என்றோ, முற்போக்குவாதி என்றோ, பிற்போக்குவாதி என்றோ, சமூக அழிவிற்கு காரணமானவன் என்றோ எனக்கு பெயர் சூட்டட்டும். அனைத்தும் ஒன்றாகப்படும் இடத்திற்கு நான் போய்ச் சேரவேண்டும். ஒரு வித்தியாசம் முக்கியமானது. அது மட்டுமே எனக்கு முக்கியமானது. நான் உண்மை பேசுகிறேனா அல்லது பொய் பேசுகிறேனா என்பது.""

                                                                                            ஜோசப் ஜேம்ஸ் (ஜேஜே)


July 5, 2019

பின்தொடரும் நிழலின் குரல் - நாவலனுபவம்

பள்ளிப்பருவத்தில் 'புரட்சி' என்ற சொல் அறிமுகமானவுடன் ஏற்பட்ட கிளர்ச்சியால் தான் நான் சே குவேரா, பிடல் காஸ்ட்ரோ, லெனின், மாவோ போன்றவர்களை பற்றி படிக்க ஆரம்பித்தேன். அவர்களே என் ஆதர்ச நாயகர்கள் ஆனார்கள். குறிப்பாக லெனின், அவரைப்பற்றிய ஒரு சிறு நூலை 'Prodigy' நிறுவனம் வெளியிட்டது. ஒரு மாணவனாக என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த புத்தகம். அவரை போலவே ஒரு 'படித்த' புரட்சியாளர் ஆகவேண்டுமென்று விரும்பினேன்.

தொடர்ச்சியாக இடதுசாரி நூல்களை வாசித்து வந்ததால் 'ரஷ்யா' என்னும் 'புரட்சிப்பொண்ணுலகம்' பூமியில் உள்ளது என்று அறிந்தேன். என் மனமும் அவ்வாறே பதிய வைத்துக்கொண்டது.

பன்னிரண்டாம் வகுப்பில் வாசிப்பு முற்றிலுமாக தடைப்பட்டது. ஆயினும் ரஷ்யா பற்றிய பிம்பம் என்னுள் மாறவில்லை.

பின்னர் கல்லூரி சேர்ந்தவுடன் மீண்டும் வாசிப்பை தொடங்கினேன். அப்போது தான் ஜெயமோகனின் அறிமுகம் கிடைத்தது. அவரது எழுத்துக்கள் ஒரு நீர்சுழல் போல் என்னை உள்ளிழுத்து கொண்டது. அவரது பெரும் நாவலான விஷ்ணுபுரத்தை வாசித்த அனுபவம் இன்னும் என்னுள் ஒரு கனவு போல் நிறைந்துள்ளது.

அதனை தொடர்ந்து நான் வாசித்த புத்தகமே 'பின் தொடரும் நிழலின் குரல்'. இது ஒரு அரசியல் நாவல். ஆனால், மன கிளர்ச்சியையோ துவேஷத்தையோ மட்டும் வாசகனுக்கு அளிக்காமல் ஒரு முழு குருக்குவெட்டு தோற்றத்தை நமக்கு தருகிறது.

அருணாசலம் என்பவன் ஒர் இடதுசாரி தோழர், தொழிற்சங்க உபதலைவர், அறிவுஜீவி. (இடதுகாலை எடுத்து வைக்க தயங்கும் ஒருவன்!).

அவனது ஆசான் K.K.மாதவநாயர்(K.K.M) - ஒரு போராளி, தொழிற்சங்க தலைவர், தீவிர ஸ்டாலினிஸ்ட், தியாகத்தால் கட்சியை வளர்த்து ஆளாக்கியவர்.(சைக்கிள் ஓட்ட தெரியாதவர், நாடகங்கள் விரும்பி பார்ப்பவர்!).

தொடக்கத்தில் ஒரு லட்சிய இயக்கமாக இருந்த கட்சி தொண்ணூறுகளில் தொழிலாளர்களுக்கு வக்கீல் சேவை செய்ய்யும் நிறுவனமாக மாறுகிறது. இதை சகிக்கக முடியாமல் K.K.M  தனிமையில் ஆழ்கிறார். அவரை சுற்றி பல மாற்றங்கள் ஏற்படுகி்றது. இறுதியாக அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுகிறார்.
அருணாசலம் அவர் இடத்தை நிறப்புகிறான். அவனது இடத்தை நாராயணன் என்னும் நவீன ஜனநாயக போராளி நிறப்புகிறான்.
மேலும் இளம் அறிவுஜீவி கதிர் அவர்கள் பக்கம் நிற்கிறான்.

அப்பொழுது அருணாசலதிற்கு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதை தொகுப்பு ஒன்று கிடைக்கிறது. அவர் கட்சிக்கு துரோகம் செய்ததால் வெளியேற்றப்பட்டவர் என்று அவன் செவிவழி செய்திகளால் அறிகிறான். ஆனால் அவரை பற்றிய சிறு தகவல் கூட கட்சி ஆவணங்களில் இல்லை. இது அருணாசலத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன், எதற்கு போன்ற கேள்விகள் அவன் மூளையை மொய்த்தன.

S.M. ராமசாமி (சுந்தர ராமசாமி) ஒரு நவீன எழுத்தாளர். அவர் வீரபத்ரபிள்ளை இறுதிக்காலத்தில் எழுதிய கடிதங்களை தருவித்து அருணாசலத்திற்கு அனுப்புகிறார்.

ரஷ்யாவில் ஸ்டாலின் அரசு நிகழ்த்தும் கொடுமைகளை எதிர்த்த தலைவர் 'புகாரின்'. அவருக்கு அரசு மரண தண்டனை வழங்கியது. இதை வீரபத்ரபிள்ளை அறிகிறார்.
புகாரின், ஸ்டாலின், ரஷ்யாவின் நிலவரம் பற்றிய உண்மைகளை எழுதுவேன் என்று பிடிவாதமாக இருந்த வீரபத்ரபிள்ளை மீது அவதூறு பரப்பி, அவரை கட்சி வெளியேற்றியது. பின்னர் அவரை பற்றிய தடையம் இல்லாமல் ஆக்கியது.
புகாரினின் ஆவி பிடித்து வீரபத்ரபிள்ளை பித்தாகிறார். அனைத்து கீழ்மைகளும் அடைந்து மரணிக்கிறார்.

இதே சம்பவங்கள் அருணாசலத்திற்கு அவனையரியாமல் நிகழ்கிறது. அவன் வீரபத்ரபிள்ளையை பற்றி கட்சி மலரில் எழுத முயல்கிறான். அவனை கட்சி அரசியல் ஆட்டத்தில் சிக்கவைத்து வெளியேற்றுகிறது. மனம் பிறழ்ந்து பித்தாகிய அவனை அவன் மனைவி நாகம்மை மீட்டெடுக்கிறாள்.

இவ்வனைத்தையும் கேட்டறிந்த ராமசாமியின் மாணவர் எழுத்தாளர் ஜெயமோகன் இதனை ஒரு நாவலாக எழுதுகிறார்
அதற்கு 'பின் தொடரும் நிழலின் குரல்' என்று தான் பெயர் வைக்க வேண்டுமென்று அருணாசலம் கூறுகிறான்.

'பின் தொடரும் நிழலின் குரல்' நாவல் வெளியாகி இருபது வருடங்கள் ஆகின்றது. ஆனால், இன்று வாசிப்பவர்களுக்கு கூட அதன் மொழி இருபது ஆண்டுகள் பழமையானது என்று தோன்றாது. ஏனெனில் அது அறத்தின் குரல், வரலாறு விழுங்கிய ஆன்மாக்களின் விசும்பல். வரலாறு வெற்றி கோஷங்களினால் மட்டும் நிறைந்தவை அல்ல என்பதனை நவீனத்துவம் மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்தபடி சொல்லிக்கொண்டே தான் இருக்கிறது.

புகாரின், வீரபத்ர பிள்ளை, அருணாசலம் அனைவரும் அறத்தின் சரடினை கெட்டியாக பிடித்துள்ளனர். அல்லது அறம் (பேய்) அவர்களை பிடித்து உலுக்குகிறது.  அவர்கள் புனிதர்கள் அல்ல, ஆயினும் அந்நிலைக்கு அருகே செல்ல முயன்ற மனம் பிறழ்ந்தவர்கள்.

ஜெயமோகனின் நாவல்கள் விரையும் விமானப்பயணமோ, குதிரைஓட்டமோ, ஓட்டப்பந்தையமோ அல்ல. அவை 'டெக்டானிக் ப்லேட்' நகர்வுகள், மிக மெல்லமாக, மிக ஆழமாக  நமக்குள் நகரும் பின்னர் சுனாமியும், நிலநடுக்கங்களும் ஏற்படுத்தி நம்மை நிலைக்குலைத்து விடும்.

ஜெயமோகன் இது விஷ்ணுபுரத்திற்கு இணையான ஒரு செவ்வியல் ஆக்கம் என்று கூறுகிறார். இரண்டும் வெவ்வேறு தளத்தில் இருந்தாலும் அது உண்மையே.

மார்க்சியம், ஸ்டாலினியம், காந்தியம் போன்ற தத்துவங்களை உரையாடல்கள் மூலம் மிக விரிவாக அலசி ஆராய்கிறது. மேலும் இதில் பல நுட்பமான இடங்களும் உள்ளது என்று நினைக்கிறேன்.

உதாரணமாக அருணாசலம், வீரபத்ரபிள்ளை இருவரும் சிவனின் பெயர் கொண்டவர்கள், அறிவுஜீவிகள்,
வேறு யாரோ ஒருவருக்காக அறமென்னும் விஷத்தை அருந்தி நீலம் பாரித்தவர்கள். விஷம் உள்இறங்கி மடியாமல் சிவனை காக்கும் நாகத்தை போல் நாகம்மை அருணாசலத்தை காக்கிறாள். ஆனால் வீரபத்ரபிள்ளைக்கு அந்த பாக்கியம் அமையவில்லை.

புகாரின், வீரபத்ரபிள்ளை, அருணாசலம் என்று தொடரும் இவ்வரிசையில் அடுத்து யார் என்று யோசிக்கும் பொழுது அருணாசலம் கதிருக்கு கடிதம் எழுதுகிறான். ஆம், வலையின் அடுத்த முடிச்சு அவன்தான்.

பாதி புத்தகம் வரை எதார்த்தமாக செல்லும் நாவல் அடுத்த பாதியில் ஒரு கனவு பாய்ச்சலினை எடுக்கிறது. கடிதம், சிறுகதை, நாடகம், குறிப்புகள், என்று பலவாக விரிந்து நாவல் ஒரு சிறந்த அனுபவத்தை அளிக்கிறது.

அருணாசலத்திற்கு மெல்ல மெல்ல மனம் பிறழ்ந்து அவன் வீரபத்ரபிள்ளையாகவே மாறும் இடம் அபாரம். K.K.Mன் உரை, கதிர்-அருணாசலம் உரையாடல், நாராயணனின் மாற்றம், அன்னா இடம்பெறும் நாடகங்கள், டால்ஸ்டாய்-தஸ்தாவெஸ்கி நாடகம், என பல சிறந்த இடங்கள் உள்ளன அவற்றை மட்டும் தனியாகவே பலமுறை வாசித்து உள்ளேன்.

இது பெண்களை அவமதிக்கும் நாவல் என்று ஒரு விமர்சன கட்டுரையில் படித்தேன். ஆனால் ஜெயமோகன் பெண்களையே அறத்தின் காவலர்களாகவும், அன்பின் விளைநிலமாகவும், ஆற்றலின் ஊற்றாகவும் இந்நாவலில் உருவகப்படுத்தியுள்ளார்.(நான் மிகைப்படுதவில்லை!)

வரலாறு என்னும் நதி அதனுள்ளே மூழிகியவர்களின் குருதியால் நிறைந்தது, அவர்களின் உத்வேகத்தால் ஓடுகிறது, அவர்களின் அறத்தால் அது தெளிந்துள்ளது.

"வெறும் சொற்கள் இல்லையா? ஆனால், அர்த்தமற்றதும் உத்வேகம் நிரம்பியதுமான சொற்கள் தரும் மெய்மையின் தரிசனத்தை ஒருங்குள்ள தருக்கம் ஒருபோதும் தருவதில்லை."
- பீயேக்காரன்