ஜெயமோகன் சிறுகதைகள் - கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று ஒரு அருமையான ஞாயிறு. காலை தளத்தை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. மற்றுமொரு ஒளசெபச்சன் கதை. கைமுக்கு பற்றி பேச ஆரம்பித்து – திருடர்கள் – போலீஸ்கள் – மாணவர்கள் – என பல்வேறு தளங்களை நோக்கி நகர்ந்து மீண்டும் கைமுக்கில் ஒரு திருப்பதுடன் முடித்துள்ளீர்கள். எவ்வளவு பெயர்கள் Dostoyevsky  முதல் சுந்தரராமசாமி வரை.

ஒளசெபச்சன் வரிசை கதைகளை வாசிக்கும் போது ஒன்று தோன்றுகிறது. ஒரு வீடியோவில் இருவர் அவரவர் வீட்டு மொட்டை மாடியிலிருந்தே tennis விளையாடுவார்கள். அதுபோல, நீங்கள் நாகர்கோவிலில் இருந்து கதையின் வரிகளாக பந்தை அடிக்கிறீர்கள், நாங்கள் தடுமாறி அதை திருப்பிடிக்கிறோம். அடுத்த வரி எதிர்பாரத ஒரு வேகமாக வருகிறது, நாங்கள் அதை நோக்கி ஓடுகிறோம். ‘ஆகா, மாட்னாங்கடா!’ என்று முகம் முழுக்க புன்னகையுடன் நீங்கள் கதை எழுதுவது இங்கே தெரிகிறது.

பிறகு, படிக்காமல் விட்ட மாய்ப்பொன், உலகெலாம் கதைகளை படித்தேன். ஒன்று நிலவே கீழிறங்கி, கடுவனும் காட்டை விட்டு நேசயன்னை நோக்கி வரும் கதை. உலகம் அவனை நோக்கி குவிகிறது.மற்றொன்று தன் எமனை நேருக்கு நேர் எதிர் கொண்டதால்  உலகம் நோக்கி விரியும் கதை. இரண்டுமே அற்புதமானவை.

வாசித்து முடித்து வெளியே வந்தால் மழை பெய்து கொண்டிருக்கிறது. திருச்சி மிகவும் வெப்பமான மாவட்டம். அதில் இந்த கோடை மழை ஒரு வரப்பிரசாதம். வான் சிற்றலை. பால்கணியில் அமர்ந்து உங்கள் கதைகளை மழையில் அசை போடும் அருமையான அனுபவத்தை தந்தமைக்கு நன்றி.

தங்கள்

கிஷோர் குமார்

***

அன்புள்ள கிஷோர்,

உண்மையில் ஒரு கதை இன்னொரு கதையை உருவாக்கும். இதை பெரும் படைப்பாளிகள் பலர் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு கதைவழியாக ஓர் உயரத்திற்குச் சென்றபின் மேலும் மேலும் செல்லமுடியும். உலகின் சில ஆசிரியர்களின் மகத்தான கதைகள் ஓரிரு நாளில் தொடர்ந்து எழுதப்பட்டவை. குறிப்பாக பால்ஸாக் அப்படி நிறைய எழுதியிருக்கிறார். அது ஒரே வைரத்தை திருப்பித்திருப்பி முடிவில்லாது பார்த்துக்கொண்டிருப்பதுபோல

ஜெ

Comments

Popular posts from this blog

நவீன ஓவியங்கள் - சி.மோகன்

ஜே.ஜே: சில குறிப்புகள் - நாவலனுபவம்

இயற்கையை அறிதல் - எமர்சன்